மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் நேற்று (26) பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தினூடாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இசைஞானி இளையராஜாவின் மகளும், மறைந்த பின்னணி பாடகியுமான பவதாரணியின் பூதவுடலை பார்ப்பதற்காக அவரின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தமிழ் திரைப் பிரபலங்கள் நேற்று இலங்கை வந்தனர்


நேற்று பகல் பவதாரணியின் உடல் கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, அங்கிருந்தே கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவ்வேளை, யுவன் சங்கர் ராஜா, அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலர் மலர்ச்சாலைக்கு சென்று பவதாரணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

