மியன்மாரில் உள்ள முகாம் ஒன்றில் பயங்கரவாத அமைப்பினால் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாகப் பணியமர்த்தப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், முகாமில் இருந்து தப்பி நேற்று (24) இலங்கை திரும்பிய ஐவரில் மூவர் வர்த்தக, ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க வந்தனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மியன்மாருக்கு தரவு செயற்பாட்டாளர்களாக சென்ற நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண் அடங்கிய குழு, பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி நவம்பர் 4ஆம் திகதி நாடு திரும்பியது.
மியன்மாருக்கு சட்டவிரோதமாக இலங்கையர்களை அனுப்புவது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டா தலைமையில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
அரலகங்வில, வதுரேகம மற்றும் தொரதியாய பிரதேசங்களில் வசிக்கும் மூன்று தரகர்களினால் சுற்றுலா விசாவில் சில இலங்கையர்கள் அந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் மூவரும் அந்தந்த பகுதிகளில் இருந்து தற்போது தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

