பாகிஸ்தானில் கேபிள் கார் விபத்தில் சிக்கியிருந்த குழந்தைகள் உட்பட 8 பேரும் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும்.
இங்குள்ள பள்ளத்தாக்குகளைக் கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.
குழந்தைகள் பாடசாலைக்கு செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், நேற்று காலை 7 மணியளவில் 6 குழந்தைகள், 2 பெரியவர்கள் என மொத்தம் 8 பேர் ஒரு கேபிள் காரில் பயணம் செய்தனர். தரையில் இருந்து சுமார் 1200 அடிக்கு மேலே அது செல்லும்போது கயிறு திடீரென அறுந்தது. இதனால் அந்த கேபிள் கார் பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.
இந்நிலையில், 14 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தைகள் உட்பட 8 பேரும் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

