சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை

நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் மேட்டு பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுகின்ற நிலையில், 20 மத்திய நிலையங்களில் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர், பொறியியலாளர் அனோஷா களுஆராச்சி தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் வறட்சியுடனான வானிலையால் 13 மாவட்டங்களை சேர்ந்த 1,66,000-இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களும் ஹம்பாந்தோட்டை, பதுளை, நுவரெலியா, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *