T-56 ரக துப்பாக்கி காணாமல் போன சம்பவம்- இருவர் கைது

பனாகொட இராணுவ முகாமின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 90 தோட்டாக்கள் அடங்கிய T-56 ரக துப்பாக்கி மற்றும் 3 தோட்டாப் பைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும், குறித்த நபருக்கு உதவிய மற்றுமொரு இராணுவ சார்ஜென்ட்டும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் மித்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாகவும், இராணுவ சார்ஜன்ட் வெயங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (16) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *