புதிய மருத்துவ சட்டமூலத்தை 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள்தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைத் தவிர்த்து, சிறந்த சுகாதார சேவையையும், பொது நலனையும் உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய காலத்திற்கேற்ற மாற்றங்களை ஆராய்ந்து புதிய மருத்துவச் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், சட்ட வரைஞர் மற்றும் இலங்கை மருத்துவ சபையின் தலைவர் ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழு, செயற்படும்.

சுகாதார சேவையை மேம்படுத்துவது மற்றும் சுகாதார சேவைக் கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பின்னாய்வுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் போதுமான அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 30 பில்லியன் ரூபா மேலதிக நிதியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்ட ஏனைய நாடுகளின் மருந்துகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அங்கீகரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய ஔடதக் கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார். அந்த நோக்கத்திற்காக, தேசிய ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகார சபைச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, அத்தியாவசிய மருந்துகள் ஒழுங்காகவும் விரைவாகவும் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் இதன் போது அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *