தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களை விமானநிலையத்தின் ஊடாக எடுத்து வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க பண்டாரநாயகக சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் செவ்வாய்க்கிழமை (23) காலை விமான நிலையத்தில் இருந்து வெளியேற முற்பட்ட போது, ஒரு தொகை தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களை வைத்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட3.5 கிலோ நிறையுடைய தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினரின் பயணப் பையிலிருந்து 91 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சந்தை பெறுமதி 4.2 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்தப்பெறுமதி சுமார் 78 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர் 7.5 மில்லியன் ரூபா அபாரதம் விதித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

