குடும்ப தகராறு தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய வந்த தாயொருவர், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலம் நேற்று சனிக்கிழமை மாலை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.
திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை பகுதியில் வசிக்கும் லெட்சுமனன் நிஷாந்தினி (வயது – 34) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு தொடர்பில் முறையிடுவதற்கு தனது இரு பிள்ளைகளுடன் இவர் பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். முறைப்பாடு செய்ததையடுத்து ஒரு பிள்ளையுடன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்றுள்ளார்.
அதன்பின்னர் அருந்துவதற்கு நீர் எடுத்துவருமாறு பிள்யையை அங்கிருந்து அனுப்பிய அவர் , பின்னர் நீர்வீழ்ச்சியில் குதித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

