H3N8 பறவைக் காய்ச்சலுக்கு சீனாவில் உலகின் முதல் உயிரிழப்பு: உலக சுகாதார நிறுவனம்

H3N8 என்ற வகை பறவைக் காய்ச்சலால் சீன பெண் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், இதுவே இவ்வகை பறவைக் காய்ச்சலுக்கு உலகின் முதல் உயிரிழப்பு என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில், “H3N8 என்ற வகை பறவைக் காய்ச்சலுக்கு சீன பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த வகை பறவைக் காய்ச்சலுக்கு மனிதர்கள் பலியாவது இதுதான் முதல் முறை. H3N8 வகை பறவைக் காய்ச்சலால் சீனாவில் இதுவரை மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்த காய்ச்சல் ஒருவருடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டது அல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மற்ற நோய்களும் தீவிரமாக இருந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

H3N8 என்ற பறவைக் காய்ச்சலால் பொதுவாக பறவைகளே பாதிப்பபடும் என்றும், பறவைகள் மூலம் விலங்குகளுக்கும் இந்த வகை காய்ச்சல் பரவும் தன்மை கொண்டது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்காங்கே தொற்று ஏற்படுவது சீனாவில் பொதுவானது. அங்கு பறவைக் காய்ச்சல் வைரஸ்கள் பெரிய கோழிப் பண்ணை மற்றும் காட்டுப் பறவை இனங்களிலிருந்து தொடர்ந்து பரவி வருகின்றன.

முன்னதாக, 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகின. இந்நிலையில், மூன்று வருடங்களுக்குப் பிறகு சீனா வெளியிட்ட அறிக்கையில் கரோனா வைரஸ் வூஹான் உணவுச் சந்தையில் இருந்த விலங்குகள் மூலமே மனிதர்களுக்குப் பரவி இருக்கக் கூடும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *