எம்பி பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி வயநாடு வருகை

எம்பி பதவியில் இருந்து தகுதீ நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் தொகுதி மக்களை சந்திக்க சகோதரி பிரியங்காவுடன் இன்று வயநாடு வருகிறார்.
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரபட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு வந்த உடனேயே எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து வயநாட்டில் உள்ள அவரது எம்பி அலுவலகத்தின் டெலிபோன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்தநிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ராகுல்காந்தி இன்று அவரது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டுக்கு வருகிறார். அப்போது தொகுதி மக்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வருகிறார். காலையில் விமானத்தில் கோழிக்கோடு வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து கார் மூலம் வயநாட்டுக்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து மாலையில் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் தொண்டர்கள் புடைசூழ பிரமாண்ட பேரணியை நடத்தவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *