10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம்: எலான் மஸ்க்

 ட்விட்டர் தளத்தில் வெகு விரைவில் பயனர்கள் சுமார் 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த அம்சம் குறித்த அறிவிப்பை ட்வீட் மூலம் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர் தளம். பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். தற்போது நீல சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். இந்நிலையில், மஸ்க் இந்த புதிய அம்சம் குறித்து தெரிவித்துள்ளார்.

தங்கள் தளத்தில் 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யும் புதிய அம்சம் விரைவில் அறிமுகமாகும் என்றும், அது சார்ந்த பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் ட்விட்டர் தளத்தை வாங்கியது முதலே புதுப்புது அப்டேட்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஊழியர்களையும் கணிசமாக குறைக்கும் நடவடிக்கையை அவர் பின்பற்றி வருகிறார்.

இந்த 10,000 கேரக்டர் அம்சம் அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கும் கிடைக்குமா என்ற விவரம் ஏதும் இப்போதைக்கு தெரிவிக்கப்படவில்லை. அதேபோல இது எப்போது அறிமுகமாகும் என்ற டைம்லைன் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *