இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதிக்கும் வட, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெறவிருந்த இரண்டாம் நாள் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
அதன்படி அச்சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (15) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதிக்கும் வட – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பின் முதல்நாளான நேற்று முன்தினம் வியாழக்கிழமை (11) நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காணிப்பிரச்சினை, பயங்கரவாதத்தடைச்சட்டம், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பன தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்நிலையில் சந்திப்பின் இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பகிர்வு குறித்துக் கலந்துரையாடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அச்சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜனாதிபதிக்கும் வட – கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாம் நாள் சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

