தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டியின் போது மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் – கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் பலாகல , குடாஹெட்டியாவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இந்த விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதன் போது மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் உதவிக்காக ஓடிக் கொண்டிருந்த சிறுவர் திடீரென வீதியில் விழுந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கலாவௌ கிராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் கெகிராவ பிரதேசத்தில் வைத்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் 10 வயதுடைய பலாகல – குடாஹெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்த சிறுவனின் சகோதரன் மற்றும் நண்பர்கள் மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த நிலையில் , அவர்களின் உதவிக்காக இவரும் போட்டியாளர்களுடன் ஓடியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

