பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 10 – 15 வருடங்களுக்குள் பெருந்தோட்ட நிறுவனங்களில் குத்தகைக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் விவசாயத்துறையை நவீன மயப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் முற்படுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான புதிய குத்தகை வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்க வகையில் காணப்படவில்லை என்பதால் குத்தகைக் காலத்துக்கான புதிய அடித்தளம் ஒன்றை கட்டமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளை மதிப்பிடுதல் மற்றும் புதிய குத்தகை கட்டமைப்பை உருவாக்குவதற்காக 2018 இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை புதுபிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

காணிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அரசாங்கத்தின் அனுமதியின்றி தமது பங்குகளை விற்பனை செய்வதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடமளிக்கக்கூடாது என்றும், விவசாயம் மற்றும் விவசாய நவீனமயப்படுத்தலின் ஓர் அங்கமாக காணிகளில் மாணிக்க கல் அகழ்வு செயற்பாடுகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதோடு, தற்போது தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்ற மகாவலி காணிப் பிரச்சினை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. அதேபோன்று பெருந்தோட்ட நிறுவனங்களில் செயற்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட வீட்டுப் பிரச்சினை மற்றும் தேயிலை, இறப்பர், தெங்கு உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதோடு, காணி மீட்பு ஆணைக்குழுவின் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *