பாடசாலைகளில் தஞ்சமடைந்த கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், கண்டாவளை பிரதேசத்தில் 321 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 96 குடும்பங்கள் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளது.

அவர்களுக்கான சமைத்த உணவுகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உப தபாலகம் உள்ளிட்ட பொது மக்கள் சேவை நிலையங்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய  சீரற்ற வானிலையால் 1,661 குடும்பங்களை சேர்ந்த 5,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 08.30 க்கு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 445 குடும்பங்களை சேர்ந்த 1,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், 1,216 குடும்பங்களை சேர்ந்த 3,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்து வரும் நிலையில், தொடர்ந்தும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொடர்ந்தும்   மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் வங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *