பீபாவினால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை கால்பந்தாட்ட அணி, இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் 2023இல் பங்கேற்பதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.
14ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியானது, எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி முதல் ஜூலை 4ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இம்முறை பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மேற்காசிய வலய நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள குவைத் மற்றும் லெபனான் ஆகிய கால்பந்தாட்ட அணிகளை 14ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் செய்வதற்கு தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனம் (SAFF) தீர்மானித்துள்ளது.
இதன்படி, போட்டியில் விளையாடவுள்ள அணிகளின் குழுவாக்கம் நேற்று முன்தினம் (17) இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்றதுடன், நடப்பு சம்பியனான இந்தியா, பாகிஸ்தானுடன் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
2021ஆம் ஆண்டு பீபாவானது பாகிஸ்தானுக்கு போட்டித்தடை விதித்திருந்தமையால், கடந்த சம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடவில்லை.
ஆயினும், தற்போது அந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளதால் இம்முறை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான போட்டிகள் ‘ஏ’ மற்றும் ‘பீ’ என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளதுடன், ‘ஏ’ குழுவில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், குவைத் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.
அத்தோடு பங்களாதேஷ், மாலைத்தீவுகள், லெபனான், பூட்டான் ஆகிய அணிகள் ‘பீ’ குழுவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

