பண்டிகை காலத்தை கருத்தில்கொண்டு யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, யுத்திய சுற்றிவளைப்பில் கடந்த 06 நாட்களில் 12,132 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 8 கிலோவிற்கும் அதிக ஹெரோயின், 4 கிலோகிராம் ஐஸ் மற்றும் 269 கிலோகிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
636 சந்தேகநபர்களுக்கு தடுப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளது.
151 சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 998 சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

