சுதந்திர தினத்தை நாம் எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது ? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாம் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நாடு யாருக்கும் அடிமையாகாமல் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து சுதந்திரமான நாடாக செயல்படுகிறது. ஏகாதிபத்திய சக்திகளின் கீழ் காலனித்துவ நாடாக இல்லாவிட்டாலும் அரசியல் சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும், பொருளாராத சுதந்திரமும் இல்லாத நாட்டில் சுதந்திர தினத்தை நாம் எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது? என்பது பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 83 ஆவது கட்டமாக காலி ஹபுகல மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி சபாநாயகர் தலைமையிலான அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றியது.இதனூடாக பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்மையை வெளிப்படுத்தும் சுதந்திரம் அரசியல் சுதந்திரம் என்பன பறிக்கப்பட்டுள்ளது.வங்குரோத்து நிலைமையால் 220 இலட்சம் மக்களும் பொருளாதார சுதந்திரத்தையும் சமூக சுதந்திரத்தையும் இழந்துள்ளனர்.சேதன உர மோசடியால் விவசாயத்தில் ஈடுபடும் சுதந்திரமும் இழக்கப்பட்டுள்ளது.மக்களுக்காக வீதியில் இறங்கி உரிமைகளை கோரி பேராட்டம் நடத்தும் போது நீர் தாரை தாக்குதலுக்கும் கண்ணீர் புகைத் தாக்குதலுக்கும் மக்கள் உள்ளாகும் போது நாட்டில் உண்மையான சுதந்திரம் உள்ளதா என்பது கேள்விக்குறியே.நுண் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் வர்த்தகங்களும் சொத்துக்களும் பரேட் சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படும் நாட்டில் கல்வியில் சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திரத்தை உண்மையாக கொண்டாட முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்.சுகாதாரத்துறையில் சுதந்திர செயல்பாடு இல்லாது போனமை நாட்டைச் சுற்றி கடல் இருந்தாலும் மீன் வளத்தில் தன்னிறைவு இன்மை போன்ற பல பிரச்சினைகள் உள்ள நாட்டில் சுதந்திரத்தை அபிமானத்துடன் கொண்டாட முடியாது.பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காத்தே 76 ஆவது சுதந்திரத்தை நாம் உண்மையில் கொண்டாட வேண்டும். இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து மீள 220 இலட்சம் மக்களும் சாதி மதம் இனம் குலம் கோத்திரம் மற்றும் கட்சி என அனைத்து வேறுபாடுகளும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறும் கோரிக்கை விடுக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *