சீனாவுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் கடந்த 2017ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கமைய , சீனாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரால் உத்தியோகபூர்வமாக இன்று (22) இராணுவ தலைமையக வளாகத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
45 மில்லியன் யுவான் (அமெரிக்க டொலர் 6.2 மில்லியன்) பெறுமதியான இந்த தொடர்பாடல் முறைமை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவினால் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வாகனங்கள் அனைத்திலும் அதிநவீன ஈஎல்டி தொடர்பாடல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன.

குறும் அலைவரிசை அமைப்பு மற்றும் அவசர காலங்களில் நேரடி தகவல் தொடர்பாடலுக்கு உதவும் விமானிகள் அற்ற விமானங்கள் (ட்ரோன்கள்) என்பன பொறுத்தப்பட்டுள்ளன.
இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்பை மிகத் திறமையாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் இயக்கும் திறனைப் பெறுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு வாய்ப்பாக அமையும்.

