சிறப்பு அனுமதி பெற்று சினிமாவில் நடிக்கும் பெண் பொலிஸ் அதிகாரி

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர், சிம்லா பிரசாத். கடந்த 2010ல் ஐபிஎஸ் அதிகாரியான அவர், தற்போது அந்த மாநிலத்திலேயே பணியாற்றி வருகிறார். அவரது தாயார் மெஹ்ருன்னிஷா, எழுத்தாளர். தந்தை பகீரத் பிரசாத், முன்னாள் போலீஸ் அதிகாரி. நடிப்பு மற்றும் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட சிம்லா பிரசாத், தந்தையின் விருப்பத்துக்காக ஐபிஎஸ் முடித்தார். தற்போது போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தாலும், அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ‘அலிஃப்’ என்ற படத்தில் ஷம்மி என்ற கேரக்டரில் நடித்தார்.

2017ல் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பிறகு 2019ல் வெளியான ‘நாகாஷ்’ என்ற படத்தில் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்தார். இதுகுறித்து சிம்லா பிரசாத் கூறுகையில், ‘எனக்கு சிறுவயதில் இருந்தே நடனம் மற்றும் நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்தது. சிவில் சர்வீசஸ் பணியில் சேர வேண்டும் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. அந்த தேர்வை எழுதுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், எனது வீட்டின் சூழ்நிலையே நான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை எனக்குள் விதைத்தது. தற்போது எனக்குள் இருக்கும் கலையார்வத்தை நிறைவு செய்யும் வகையில், மேலிடத்தில் சிறப்பு அனுமதி பெற்று சினிமாவில் நடித்து வருகிறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *