சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் – மைத்திரி


நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடன் பெற்றுள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதைப் போன்று , அதனை மீள செலுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். பாரிய எரிமலையின் கீழ் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். அந்த தீயை அணைந்து சிறந்த நாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தே சிந்திக்க வேண்டியுள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு எம்மால் பல சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட கோரிக்கை , பொதுஜன பெரமுனவினரின் செயற்பாடுகளால் இடை நிறுத்தப்பட்டன. எனினும் நாம் இன்னும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். எனவே தற்போதேனும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.

அதற்கமைய குடும்ப அரசியல் அற்ற தூய்மையான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். பதவிகள் குறித்த எண்ணங்களை முற்றாகத் துறந்து ஆட்சியை பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் பின்னர் யார் ஆட்சியமைத்தாலும் மீண்டும் நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *