கொழும்பு, கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
வடக்குக்கான ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளால், கடந்த ஜனவரி 5ஆம் திகதி முதல் கொழும்பு, கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜூன் மாதம் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான ரயில் மார்க்க சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் யாவும் இவ்வாண்டு இறுதியில் நிறைவுசெய்யப்படவுள்ளன.
அதன் பின்னரே, கொழும்பு, கோட்டை முதல் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வரையிலான நேரடி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

