ஒக்டோபரில் பணவீக்கம் 1.5 சதவீதமாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த செப்டெம்பர் மாதம் 1.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஒக்டோபர் மாதத்தில் 1.5 சதவீதமாக சொற்ப அளவினால் அதிகரித்துள்ளது.

அதன்படி, கடந்த செப்டெம்பர் மாதத்தில் 5.2 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஒக்டோபரில் மாற்றமின்றி அதே மட்டத்தில் காணப்பட்டதுடன், செப்டெம்பரில் 4.7 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் ஒக்டோபரில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் ஒக்டோபரில் -0.22 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட -0.63 சதவீத வீழ்ச்சியும், உணவல்லாப்பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள்,கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட 0.41 சதவீத அதிகரிப்பும் காரணமாக அமைந்துள்ளது.

அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் பதிவான 1.9 சதவீதத்திலிருந்து ஒக்டோபரில் 1.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் மூலம் பணவீக்கமானது நடுத்தரகாலத்தில் 5 சதவீதம் எனும் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடையுமென எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *