இரண்டாம் உலக போரின்போது 1000 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டு பிடிக்கப்பட்டது

80 ஆண்டுகளுக்கு முன் 2-ம் உலக போரின் போது 1000 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1942-ம் ஆண்டு 2-ம் உலக போர் நடந்த போது , ஜப்பான் நாட்டை சேர்ந்த மான்டிவீடியோ மாரு என்ற பெயரிலான கப்பலானது ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சுமந்து கொண்டு கடலில் பயணம் செய்து கொண்டிருந்தது.

பப்புவா நியூ கினியாவில் வைத்து 850 போர் கைதிகள் மற்றும் பொதுமக்களில் 200 பேரை சிறை பிடித்த ஜப்பானியர்கள் அந்த கப்பலில் பயணித்துள்ளனர். அந்த வழியே அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலான யூ.எஸ்.எஸ். ஸ்டர்ஜன் வந்து உள்ளது.

இந்த நிலையில், கப்பலில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாத சூழலில் அதனை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் குண்டு வீசி தாக்கி அழித்தது. பின்னர் அதனை வெற்றியாகவும் கொண்டாடியுள்ளனர்.

இந்த பேரிடரில் 12-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. டென்மார்க், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா உள்பட ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்களும் அதில் இருந்து உள்ளனர். இந்நிலையில் அவுஸ்திரேலியா பாதுகாப்பு துறை, கடல்பகுதி தொல்லியலாளர்கள் மற்றும் பூக்ரோ என்ற டச்சு நாட்டு ஆழ்கடல் ஆய்வு நிறுவனம் இணைந்து கப்பலை தேடும் பணியில் இந்த வார தொடக்கத்தில் ஈடுபட்டது.

பிலிப்பைன்சை ஒட்டிய தென்சீன கடல் பகுதியில் அந்த கப்பல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவுஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லெஸ் தெரிவிக்கையில் , ‘ இந்த கப்பலை பற்றிய செய்தியை அறிவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய குடும்பத்தினர் காத்திருந்தனர். 80 ஆண்டுகளுக்கு பின்பு தேடுதல் பணியின் முயற்சியால் இறுதியாக கப்பலின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதற்கு நன்றிகள்.’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *