இம்ரான் கான் கொல்லப்படுவார் – பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்

“இம்ரான் கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம்” என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராணா சனாவுல்லா பேசும்போது, “பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான் கான் இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் அரசியலைக் கொண்டு சென்றிருக்கும் பாதையால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம். இம்ரான் கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார். அவர் எங்கள் எதிரி. அவ்வாறே அவர் நடத்தப்படுவார்” என்று பேசினார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் (70) கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவி விலகினார். அவரது தலைமையிலான கூட்டணியில் இருந்து, முக்கியக் கட்சி பிரிந்து, எதிர்க்கட்சியுடன் இணைந்ததால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் தொடர்ந்து பேரணிகளையும், போராட்டங்களையும் நடத்தி வந்தார். கடந்த நவம்பர் மாதம் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *