“இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது” – ‘தங்கலான்’ -பா.ரஞ்சித்

“இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. உலக அளவில் ரசிகர்கள் ரசிக்கும் நல்ல சினிமாவாக இது இருக்கும்” என ‘தங்கலான்’ படம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “தங்கலான் 1990 காலக்கட்டத்தில் நடக்கும் கதை. கேஜிஎஃப் உருவாவதற்கு முன்பு அந்த கேஜிஎஃப் நிலத்தில் இருந்த தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றிய கதை. அந்த மக்களின் கலாசாரத்தையொட்டி படத்தை உருவாக்கியிருக்கிறேன். அது திரையில் பிரதிபலிக்கும்.

இந்தப் படத்துக்காக ஆறு, ஏழு மாதங்களாக வேறு எந்தப் படத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் காத்திருந்தார் விக்ரம். ஹேர்ஸ்டைல் மற்றும் உடலமைப்பு என கூறிய மாற்றங்களை செய்ய எந்தவித மாற்றுக் கருத்துமில்லாமல் ஒப்புக்கொண்டார். அவருக்கு புது அனுபவமாக இருந்தது என கூறினார்.

படபிடிப்பு தொடங்கி ஆறு, ஏழு நாட்கள் முடிந்த பின்பு ஒருநாள் என்னை தொடர்பு கொண்டு, ‘உங்களுடைய டைரக்‌ஷன் ஸ்டைல் இன்டர்ஸ்டிங்காக உள்ளது. நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் பண்றேன்’ என நம்பிக்கையுடன் சொன்னார் விக்ரம்.

105 நாட்கள் இதுவரை படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அந்த நாட்கள் அனைத்தும் கடினமான நாட்கள்தான். அந்தச் சூழலிலும் ரசித்து கொடுக்கும் நடிகர்கள்தான் எனக்கு கிடைத்தனர். அவர்களின் உழைப்பு அற்புதமானது. இவ்வளவு வற்புறுத்த வேண்டுமா என நான் யோசிப்பேன். படத்துக்காக சமரசமின்றி தொடர்ந்து உழைத்தோம். இன்னும் 20 நாட்கள்தான் உள்ளது. முடித்து விட்டால் உலக அளவில் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *