இனவாத கருத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கரு ஜயசூரிய

இனவாத மற்றும் மதவாத கருத்துகளால் நாடு மீண்டும் அனர்த்தத்தை நோக்கி பயணிக்கக்கூடும். அதுபோன்ற நிலையை தடுப்பது ஒட்டுமொத்த நாட்டினதும் பொறுப்பாகும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கருஜசூரிய தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு தரப்புகள் மேற்கொண்டு வரும் சில கருத்து தெரிவிப்புகள் மற்றும் அத்துடன் தொடர்புபட்ட பல்வேறு செயல்கள் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் உன்னிப்பான கவனம் செலுத்தியதுடன், இவை நாட்டை மீண்டும் பாரிய அனர்த்தத்திற்கு இட்டு செல்லும் முயற்சிகளாக இருக்கக் கூடும் என்பதை எச்சரிக்கின்றோம்.

மதம் சார்ந்த பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் சில தரப்பினரால் மேற்கொள்ளும் கருத்து தெரிவிப்புகளை கவனிக்கும்போது, எமக்கு பாரிய மன வருத்தம் ஏற்படுகிறது. அதேபோன்று எமது நாட்டின் கடந்த கால கசப்பான சம்பவங்களை கூர்ந்து கவனிக்கையில் அவற்றிற்கும் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளும், செயற்பாடுகளும் காரணமாக அமைந்திருந்தமை தெளிவாகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இது போன்ற முயற்சிகளின் ஊடாக நாட்டை மீண்டும்  இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்லும் கொடிய முயற்சிகள் இருக்கின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

1983ல் இடம் பெற்ற தும்பியல் நிலைக்கு முற்பட்ட காலப்பகுதியிலும் இதுபோன்ற சூழல் நிலவியது. 1915 இல் இடம் பெற்ற மதவாத போராட்டத்திற்கும் இதுபோன்ற காரணங்களே வழிவகுத்தன. மேலும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் ஏற்பட்ட வடுக்கள் இதுவரை மறைந்திடாத நிலையில், நாட்டின் இதுபோன்ற சூழல்கள் ஏற்படுத்துவதை சாதாரணமாக கருத முடியாது.

இன மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு தவறி இருக்கும் அனைத்து நாடுகளும் எதிர்கொண்டு வரும் மிக மோசமான நிலைகளையும், இதுபோன்ற நிலைமைகளின் காரணமாக எமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அனர்த்தங்களையும் சிந்திக்கையில், மீண்டும் கடந்தகால துன்பகரமான சூழ்நிலைகளை தோற்றுவிக்க விடாமல் தடுப்பது எம் அனைவரினதும் கடமையாகும். இதுதொடர்பில்  நாட்டின் அரசியல் தரப்பு மற்றும் மதத் தலைவர்கள் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்களுக்கும் பாரிய கடமை இருக்கின்றது என்பது எமது நம்பிக்கையாகும். மேலும் இது போன்ற குறுகிய நோக்குடைய முயற்சிகளை தோல்வியடைய செய்வதற்கு நாட்டின் புத்திஜீவிகள்  முன் வர வேண்டும் என்பதும் எமது நம்பிக்கையாகும்.

ஆகையால் எம் எதிரே உள்ள கொடிய நோக்கங்களுடனான முயற்சிகளை புத்திசாதூரியத்துடனும் பொறுமையுடனும் கையாளுமாறு நாட்டின் தேசிய தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இலங்கையர்களிடத்திலும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். மேலும் எமது நாட்டை அனர்த்தத்தை நோக்கி கொண்டு செல்லக்கூடிய முயற்சிகளை தோல்வியடையச் செய்வதற்கு முன்வருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *