இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 30 நாட்களில் மாத்திரம் 3 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 34 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று(07) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நேற்று(07) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *