அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தில் பெருமளவான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்படாமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்தன விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சமூர்த்தி கொடுப்பனவைப் பெறும் 12 இலட்சத்து 80 ஆயிரத்து 747 குடும்பங்களில் 7 இலட்சத்து 87 ஆயிரத்து 653 குடும்பங்கள் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆட்சேபனைகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு உள்ளாகாத பயனாளர்களுக்கு இம்மாத இறுதிக்குள் கொடுப்பனவுகள் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அவர் த் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும தொடர்பில் ஒட்டுமொத்தமாக 9 இலட்சத்து 82 770 ஆட்சேபனைகளும் , 62 368 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. கிடைக்கப் பெற்றுள்ள ஆட்சேபனைகளில் 650 000 பயனாளிகளின் பெயர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் உள்ளவாங்கப்பட்டுள்ளவையாகும். எவ்வாறிருப்பினும் இவர்கள் தமக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளனர்.
சமூர்த்தி பயனாளிகளில் 70 சதவீதமானோர் அஸ்வெசும பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் அங்கவீனமுற்றோர் , முதியோருக்கான கொடுப்பனவு , நீரிழிவு நோயாளர்களுக்கான கொடுப்பனவு என்பவற்றைப் பெறுவோருக்கான புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் வரை அவர்களுக்கு பழைய முறைமையின் கீழ் கொடுப்பனவுகளை செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆகஸ்ட்டில் அடுத்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும். அந்த விண்ணப்பங்களுக்கமைய தற்போதைய பெயர்ப்பட்டியல் புதுப்பிக்கப்படும்.
இம்முறை பெருமளவான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாமை குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரும் , எதிர்க்கட்சிகளை பிரதிநிதிப்படுத்தும் மலையக பிரதிநிதிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி இ பிரதமர் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். எனவே ஆகஸ்டில் அஸ்வெசும பெயர்ப்பட்டியல் புதுப்பிக்கப்படும் போது தற்போது விடுபட்டுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் நிச்சயம் உள்வாங்கப்படுவர். அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

