அரசியல் நியமனங்களை  நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்  – எதிர்க்கட்சித் தலைவர்

பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசியல் நியமனங்களை வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டு விட்டு அரச நிர்வாகத்தை முறையற்ற வகையில் முன்னெடுத்து செல்ல முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்துக்காக பிரதேச செயலாளர்கள் ஆணையாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் வகையில் நியமனங்கள் வழங்கும் அதிகாரம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட சுற்றறிக்கையை  அரச சேவைகள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

பிரதேச செயலாளர்கள்,மாநகர ஆணையாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க புதிய நியமனம் ஒன்று வழங்கப்பட வேண்டிய தேவை ஏதும் கிடையாது. 

நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசியல் வழங்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரதேச சபை செயலாளர் உள்ளார்,மாநகர ஆணையாளர் உள்ளார் இவ்வாறான நிலையில் எதற்கு மேலதிகமாக புதிய நியமனங்கள்.

முறையற்ற வகையில் செயற்படுவதை விடுத்து தேர்தலை நடத்துங்கள்.தேர்தலை நடத்தாமல் அரசாங்கத்தின் சகாக்களுக்கு பதவி வழங்குவது முறையற்றது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *